Saturday, October 17, 2009

ரிப்பன் பக்கோடா



தேவையானவை:
  • அரிசி மாவு - 1 1/2 கப்
  • கடலை மாவு - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • வெண்ணை - 2 டீஸ்ப்பூன்

அரைத்துக் கொள்ள:

  • வர மிளகாய் - 4
  • பூண்டு - 6 பல்
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்ப்பூன்

செய்முறை:

  • அரைத்துக் கொள்ள வேண்டியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணை ஆகியவற்றுடன் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவினை இட்டுப் பிழியவும்.
  • பிழியும் போது ஒன்றன் மேல் ஒன்று விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • சற்று நேரத்தில் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் போது எடுக்கவும்.

Tuesday, June 30, 2009

பிஸிபேலாபாத்



சிம்பிளா சொன்னா சாம்பார் சாதம் ! ஆனால் சாதத்தில், சாம்பாரை ஊற்றி பிசைவதை விட, பிஸிபேலாபாத்திற்கு சுவை சற்று கூடுதல் தான். செய்முறையும் கொஞ்சமோ கொஞ்சம் அதிகம் தான் ! பரவலா கர்நாடகத்தில் தோன்றியதாக இணையத்தின் மூலமும் நண்பர்களின் மூலமும் அறிகிறோம். சில ஆண்டுகளாகவே நம்ம ஊரிலும் ஊடு கட்ட ஆரம்பித்திருக்கிற‌து பிஸிபேலாபாத் :)) எங்க வீட்டுக் குட்டீஸின் பேவரிட் இந்திய உணவுகளில் ஒன்று.

இர‌ண்டு க‌ட்ட‌ங்க‌ளாக‌ செய்முறையைப் பிரித்து (மேய்ந்து....) எடுத்துக் கொள்வோம். முதலில் பிஸிபேலாபாத் பொடி அப்புற‌ம் பிஸிபேலாபாத்.

பிஸிபேலாபாத் பொடி

தேவையானவை:

  • வரமிளகாய் - 6
  • வெந்தயம் - சிறிதளவு
  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • பட்டை - சிறிதளவு
  • கிராம்பு - 2
  • உளுத்தம் பருப்பு - 2 டீஸ்ப்பூன்
  • கடலைப் பருப்பு - 2 டீஸ்ப்பூன்
  • மல்லி - 2 டீஸ்ப்பூன்
  • தேங்காய் - சிறிதளவு, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்


செய்முறை:

  • வாணலில் (எண்ணை விடாமல்) வரமிளகாய், வெந்தயம், கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.
  • கடுகு வெடிக்கையில், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • ஆறிய பின், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிஸிபேலாபாத் பொடி ரெடி.


பிஸிபேலாபாத்

தேவையானவை:
  • அரிசி - 1 கப்
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • தக்காளி ‍ 1
  • பீன்ஸ் - 5
  • வெண்டைக்காய் - 2
  • கேரட் ‍ 1
  • கத்தரிக்காய் - 2
  • உருளைக்கிழங்கு ‍ 1
  • காலிஃப்ளவர் - சிறிது
  • முருங்கைக்காய் - 1
  • புளி - சிறிது
  • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • முந்திரிப் பருப்பு - 3~5
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 10~15

செய்முறை:


  • துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, சீரகம், முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். சிறிது நேரத்தில் வரமிளகாயைக் கிள்ளிப் போடவும்.
  • வெங்காயம், பச்சை மிளக்காய் சேர்த்து வதக்கவும்.
  • அரிந்த காய்கறிகளை சில நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.
  • மஞ்சள் பொடி சேர்த்து, ஊற வைத்த பருப்பு, அரிசி சேர்த்து, அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
  • அரிசி, காய்கறிகள் பாதி வெந்த நிலையில் தக்காளி சேர்க்கவும்.
  • முக்கால்வாசி வெந்த பின், அரைத்து வைத்த பிஸிபேலாபாத் பொடி, உப்பு, புளிக் கரைசல் சேர்க்கவும்.
  • தேவை எனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகள் நன்கு வெந்து, சாதமும் வெந்த நிலையில் கொத்தமல்லி தூவி, விரும்பினால் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும்.
  • சூடான, சுவையான .... ஆங் ... பிஸிபேலாபாத் ரெடி :)) சுவைத்து மகிழுங்கள் !

Sunday, March 15, 2009

மிளகாய் சட்னி



இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை :))

ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாளைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

தேவையானவை:

  • வரமிளகாய் - 10 - 12
  • பூண்டு - 4 பல்
  • சின்ன வெங்காயம் - 10 - 15
  • தக்காளி - 2
  • புளி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை:

  • தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • சிறிது நேரத்தில், மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • எண்ணை வெளியில் வரும்வரை வதக்கினால் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எங்கேப்பா நேரம்னு நீங்க சொல்றது கேக்குது :))அதனால், ஓரளவு பச்சை வாடை நீங்கினால் போதும்.
  • நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான மிளகாய் சட்னி ரெடி.


குறிப்பு: தாளித்தவுடன், நன்கு அறிந்த சிறிது பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கினால், சுவை மேலும் அதிகரிக்கும். சட்னி அளவும் கூடும் ... :)

Saturday, February 14, 2009

வாழைப்பூ வடை



தேவையானவை:
  • வாழைப்பூ
  • கடலை பருப்பு - 1 கப்
  • வர மிளகாய் - 4 ~ 6
  • பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
  • தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 2
  • கறிவேப்பிலை - 10~15 இலைகள்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • கடலைப் பருப்பை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பூவை பிரித்து, உள்ளிருக்கும் நரம்புகளை நீக்கவும்.
  • வானலியில் எண்ணை விட்டு அடுப்பில் ஏற்றவும்.
  • வாழைப்பூவில் கொஞ்சம் உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
  • அரைத்த வாழைப்பூவைப் பிழிந்து, தண்ணீரை அகற்றி விடுங்கள்
  • மிக்ஸியில் வரமிளகாய், பெருஞ்சீரகம் மற்றும் ஊறிய கடலைப் பருப்பையும் சேர்த்து 70% அரைக்கவும்.
  • அரைத்த பருப்புடன், மஞ்சள் பொடி, உப்பு, தேங்காய் துறுவல், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், வாழைப்பூ சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும்.

Thursday, January 29, 2009

உளுந்து வடை



மிக எளிய முறையில், சாஃப்டா (சத்தமே போடாம :))) ஒரு மெதுவடை செய்யலாம் வாங்க ...

தேவையானவை:


உளுந்து - 1 கப்
ப.மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10-15 இலைகள்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • உளுந்தை, குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • க்ரைண்டர் அல்லது மிக்ஸியில் ப.மிளகாய் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.
  • இதனோடு ஊறிய உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். நடுவே உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
  • வானலியில் எண்ணையிட்டு அடுப்பில் ஏற்றவும்.
  • நன்கு அரைத்த உளுந்தில், கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து, கையில் பிசறவும்.
  • தண்ணீர் தொட்டு சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி, தண்ணீர் தொட்டு துளையிட்டு, சூடான எண்ணையில் போடவும்.
  • சிறிது நேரத்தில் திருப்பி விட்டு, பொன்னிறமாக ஆகும் சமயம் (அல்லது எண்ணை குமிழிகள் குறைந்த நேரம்) எடுத்து விடலாம்.

டிப்ஸ்:
  • வடை கடினமாக இருக்கிறது என்றால், மாவில் தண்ணீர் தெளித்து, மீண்டும் கொஞ்ச நேரம் அரைக்கவும்.
  • வடை எண்ணை குடிப்பது போல் இருந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்..

Thursday, January 1, 2009

மா உருண்டை



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

மிக மிக எளிதான ஒரு ஸ்வீட் செய்யலாம் இன்னிக்கு.

தேவையானவை:

  • பாசிப்பருப்பு மாவு - 1 கப்
  • பொடியாக்கிய சர்க்கரை - 1 கப்
  • நெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:
  • பாசிப்பருப்பை நன்கு வறுத்து, மிஷின் அல்லது மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் பாசிப்பருப்பு மாவு எடுத்துக் கொள்ளவும்.
  • பௌடர்ட் சுகர் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறது. இல்லை என்றால், சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் எடுத்து, பாசிப்பருப்பு மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • அடுப்பை மீடியம் சூட்டில் வைத்து, வானலியில் நெய் விட்டு சூடாக்கவும்.
  • மெல்லிய சூடான நெய்யில், மாவுக் கலவையை சேர்த்து கலக்கி, மாவில் மிதமான சூடு ஏறியவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • கட்டிகள் இல்லாமல் மாவை நன்கு பிசறவும். பின், சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
  • அழகான சுவையான மா உருண்டை ரெடி.