Tuesday, June 30, 2009

பிஸிபேலாபாத்



சிம்பிளா சொன்னா சாம்பார் சாதம் ! ஆனால் சாதத்தில், சாம்பாரை ஊற்றி பிசைவதை விட, பிஸிபேலாபாத்திற்கு சுவை சற்று கூடுதல் தான். செய்முறையும் கொஞ்சமோ கொஞ்சம் அதிகம் தான் ! பரவலா கர்நாடகத்தில் தோன்றியதாக இணையத்தின் மூலமும் நண்பர்களின் மூலமும் அறிகிறோம். சில ஆண்டுகளாகவே நம்ம ஊரிலும் ஊடு கட்ட ஆரம்பித்திருக்கிற‌து பிஸிபேலாபாத் :)) எங்க வீட்டுக் குட்டீஸின் பேவரிட் இந்திய உணவுகளில் ஒன்று.

இர‌ண்டு க‌ட்ட‌ங்க‌ளாக‌ செய்முறையைப் பிரித்து (மேய்ந்து....) எடுத்துக் கொள்வோம். முதலில் பிஸிபேலாபாத் பொடி அப்புற‌ம் பிஸிபேலாபாத்.

பிஸிபேலாபாத் பொடி

தேவையானவை:

  • வரமிளகாய் - 6
  • வெந்தயம் - சிறிதளவு
  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • பட்டை - சிறிதளவு
  • கிராம்பு - 2
  • உளுத்தம் பருப்பு - 2 டீஸ்ப்பூன்
  • கடலைப் பருப்பு - 2 டீஸ்ப்பூன்
  • மல்லி - 2 டீஸ்ப்பூன்
  • தேங்காய் - சிறிதளவு, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்


செய்முறை:

  • வாணலில் (எண்ணை விடாமல்) வரமிளகாய், வெந்தயம், கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.
  • கடுகு வெடிக்கையில், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • ஆறிய பின், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிஸிபேலாபாத் பொடி ரெடி.


பிஸிபேலாபாத்

தேவையானவை:
  • அரிசி - 1 கப்
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • தக்காளி ‍ 1
  • பீன்ஸ் - 5
  • வெண்டைக்காய் - 2
  • கேரட் ‍ 1
  • கத்தரிக்காய் - 2
  • உருளைக்கிழங்கு ‍ 1
  • காலிஃப்ளவர் - சிறிது
  • முருங்கைக்காய் - 1
  • புளி - சிறிது
  • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • முந்திரிப் பருப்பு - 3~5
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 10~15

செய்முறை:


  • துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, சீரகம், முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். சிறிது நேரத்தில் வரமிளகாயைக் கிள்ளிப் போடவும்.
  • வெங்காயம், பச்சை மிளக்காய் சேர்த்து வதக்கவும்.
  • அரிந்த காய்கறிகளை சில நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.
  • மஞ்சள் பொடி சேர்த்து, ஊற வைத்த பருப்பு, அரிசி சேர்த்து, அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
  • அரிசி, காய்கறிகள் பாதி வெந்த நிலையில் தக்காளி சேர்க்கவும்.
  • முக்கால்வாசி வெந்த பின், அரைத்து வைத்த பிஸிபேலாபாத் பொடி, உப்பு, புளிக் கரைசல் சேர்க்கவும்.
  • தேவை எனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகள் நன்கு வெந்து, சாதமும் வெந்த நிலையில் கொத்தமல்லி தூவி, விரும்பினால் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும்.
  • சூடான, சுவையான .... ஆங் ... பிஸிபேலாபாத் ரெடி :)) சுவைத்து மகிழுங்கள் !