Tuesday, June 30, 2009

பிஸிபேலாபாத்



சிம்பிளா சொன்னா சாம்பார் சாதம் ! ஆனால் சாதத்தில், சாம்பாரை ஊற்றி பிசைவதை விட, பிஸிபேலாபாத்திற்கு சுவை சற்று கூடுதல் தான். செய்முறையும் கொஞ்சமோ கொஞ்சம் அதிகம் தான் ! பரவலா கர்நாடகத்தில் தோன்றியதாக இணையத்தின் மூலமும் நண்பர்களின் மூலமும் அறிகிறோம். சில ஆண்டுகளாகவே நம்ம ஊரிலும் ஊடு கட்ட ஆரம்பித்திருக்கிற‌து பிஸிபேலாபாத் :)) எங்க வீட்டுக் குட்டீஸின் பேவரிட் இந்திய உணவுகளில் ஒன்று.

இர‌ண்டு க‌ட்ட‌ங்க‌ளாக‌ செய்முறையைப் பிரித்து (மேய்ந்து....) எடுத்துக் கொள்வோம். முதலில் பிஸிபேலாபாத் பொடி அப்புற‌ம் பிஸிபேலாபாத்.

பிஸிபேலாபாத் பொடி

தேவையானவை:

  • வரமிளகாய் - 6
  • வெந்தயம் - சிறிதளவு
  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • பட்டை - சிறிதளவு
  • கிராம்பு - 2
  • உளுத்தம் பருப்பு - 2 டீஸ்ப்பூன்
  • கடலைப் பருப்பு - 2 டீஸ்ப்பூன்
  • மல்லி - 2 டீஸ்ப்பூன்
  • தேங்காய் - சிறிதளவு, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்


செய்முறை:

  • வாணலில் (எண்ணை விடாமல்) வரமிளகாய், வெந்தயம், கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.
  • கடுகு வெடிக்கையில், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • ஆறிய பின், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிஸிபேலாபாத் பொடி ரெடி.


பிஸிபேலாபாத்

தேவையானவை:
  • அரிசி - 1 கப்
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • தக்காளி ‍ 1
  • பீன்ஸ் - 5
  • வெண்டைக்காய் - 2
  • கேரட் ‍ 1
  • கத்தரிக்காய் - 2
  • உருளைக்கிழங்கு ‍ 1
  • காலிஃப்ளவர் - சிறிது
  • முருங்கைக்காய் - 1
  • புளி - சிறிது
  • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • முந்திரிப் பருப்பு - 3~5
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 10~15

செய்முறை:


  • துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, சீரகம், முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். சிறிது நேரத்தில் வரமிளகாயைக் கிள்ளிப் போடவும்.
  • வெங்காயம், பச்சை மிளக்காய் சேர்த்து வதக்கவும்.
  • அரிந்த காய்கறிகளை சில நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.
  • மஞ்சள் பொடி சேர்த்து, ஊற வைத்த பருப்பு, அரிசி சேர்த்து, அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
  • அரிசி, காய்கறிகள் பாதி வெந்த நிலையில் தக்காளி சேர்க்கவும்.
  • முக்கால்வாசி வெந்த பின், அரைத்து வைத்த பிஸிபேலாபாத் பொடி, உப்பு, புளிக் கரைசல் சேர்க்கவும்.
  • தேவை எனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகள் நன்கு வெந்து, சாதமும் வெந்த நிலையில் கொத்தமல்லி தூவி, விரும்பினால் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும்.
  • சூடான, சுவையான .... ஆங் ... பிஸிபேலாபாத் ரெடி :)) சுவைத்து மகிழுங்கள் !

10 comments:

cheena (சீனா) said...

சதங்கா - எப்ப வரட்டும் - வந்து சாப்பிடுறோம் - நாக்குலே ஊறுது

நானானி said...

பிஸிபேலாபாத் சூப்பர்! சதங்கா!

உங்களுக்கு இறுகினாற்போல் இருந்தால் பிடிக்குமா? கொஞ்சம் தளதளவென இருந்தால் பிடிக்குமா?

எனக்கு ரெண்டாவதுதான் பிடிக்கும்.
முந்திரிப் பருப்பை கடைசியில் நெய் ஊற்றும் போது வறுத்துப் போடால் நல்லாருக்காது?
ரொம்ப நாளாச்சு செய்து. செய்யணும். அருமையா இருந்துது.

வறுக்கும் சமாச்சாரத்தில் மராக்கா மொட்டும் சேர்ப்பார்கள். வாசனை தூக்கும்.

துளசி கோபால் said...

//அறிந்த காய்கறிகளை //

???? எல்லாம் அறிந்த காய்களா?:-)

அறிந்த = அரிந்த


செய்முறை சரியா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

மிகத் தெளிவான செய்முறை. ஆமாம் இது கர்நாடகா ஸ்பெஷல்தான்:)!

வல்லிசிம்ஹன் said...

சதங்கா இந்த முறையும் நல்லா இருக்கு. செய்து பார்க்கணும்.

எங்க மாமியார் அரிசி பருப்பு ரெண்டும் சேர்த்து வேகவச்சு,

புளிக்கரைசலில் காய்கறிகளை வேக வைத்து, ரெண்டையும் கலப்பார்கள் அப்புறம்தான் சாம்பார் பொடி.நெய்,முந்திரிப்பருப்பு

சதங்கா (Sathanga) said...

cheena (சீனா) said...

//சதங்கா - எப்ப வரட்டும் - வந்து சாப்பிடுறோம் - நாக்குலே ஊறுது//

வாங்க, வாங்க. எனி டைம், யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் :))

சதங்கா (Sathanga) said...

நானானி said...

//பிஸிபேலாபாத் சூப்பர்! சதங்கா!//

மிக்க நன்றி.

//உங்களுக்கு இறுகினாற்போல் இருந்தால் பிடிக்குமா? கொஞ்சம் தளதளவென இருந்தால் பிடிக்குமா?

எனக்கு ரெண்டாவதுதான் பிடிக்கும்.//

எனக்கும் இரண்டாவது தான். பசங்களுக்காக கொஞ்சம் இறுகினாற் போல் செய்திருக்கிறோம்.

//முந்திரிப் பருப்பை கடைசியில் நெய் ஊற்றும் போது வறுத்துப் போடால் நல்லாருக்காது?//

நல்லா தான் இருக்கும். முதலிலேயே சேர்த்தால் நன்றாக சாதத்தோடு சேர்ந்து கலந்திருக்கும். அதனால தான் :))

//ரொம்ப நாளாச்சு செய்து. செய்யணும். அருமையா இருந்துது.//

செஞ்சு பாருங்க. சீக்கிரம் எங்களையும் கூப்பிடுங்க ... அங்க சீனா ஐயாவும் ரெடியா இருக்காரு :))

//வறுக்கும் சமாச்சாரத்தில் மராக்கா மொட்டும் சேர்ப்பார்கள். வாசனை தூக்கும்.//

இது என்ன புதுசா இருக்கு. இங்க கிடைக்குமா ?

நானானி said...

ஹோல் கரம் மசாலா சாமான்கள் வாங்கும் போது மராக்கா மொட்டு என்று கேட்டால் கொடுப்பார்கள்.

சதங்கா (Sathanga) said...

Information said...
//மிகவும் அருமை//

மிக்க நன்றி நண்பரே !

சதங்கா (Sathanga) said...

நானானி said...
//ஹோல் கரம் மசாலா சாமான்கள் வாங்கும் போது மராக்கா மொட்டு என்று கேட்டால் கொடுப்பார்கள்.//

தலையில் கொட்ட மாட்டார்களே ? :)) இதுக்கு ஆங்கிலப் பெயர், ஹிந்திப் பெயர் ஏதாவது இருக்கா ?